யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி

  • யாழ்.பேராயரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களை நேற்று (02) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து, யாழ்.ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்.ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதனைடுத்து நேற்று பிற்பகல் யாழ். நாக விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

புனித தலத்தை சென்றடைந்த ஜனாதிபதி முதலில் புத்த ஸ்தூபிக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்தார்.

“பௌத்த இந்து சமய மன்றம்” சார்பில் அதன் தலைவர் கலாநிதி எம். மோகனையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.