ஆனந்த – நாளந்த 94வது கிரிக்கெட் மாபெரும் சமர் போட்டியை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற ஆனந்த மற்றும் நாளந்த கல்லூரிகளுக்கு இடையிலான 94 ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமர் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (03) பார்வையிட்டார்.

மறைந்த கலாநிதி என். எம். பெரேரா ஞாபகார்த்த சவால் கிண்ணத்திற்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி இவ்வருடம் பிரமாண்டமாக நடைபெற்று வருவதுடன் அதன் இறுதி நாள் இன்றாகும்.

மாணவர்களை உற்சாகப்படுத்த விளையாட்டுப் போட்டியைக் காணச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விளையாட்டுப் போட்டியைக் காண வந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவுகூரும் வகையில், கொழும்பு ஆனந்த வித்தியாலய அதிபர் த.லால் திஸாநாயக்க மற்றும் நாளந்த வித்தியாலய அதிபர் இரான் சம்பிக டி சில்வா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசில் ஒன்றையும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் தேபந்து தென்னகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.