அரச நாடக விருது விழா ஜனாதிபதி தலைமையில்

இலங்கையின் அரங்கியற் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய படைப்பாளர்களை ஊக்குவித்து பாராட்டுவதற்கான அரச நாடக விருது விழா – 2022 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற அரங்கத்தில் நேற்று (19) நடைபெற்றது.

புத்த சாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைச் சபையின் அரச நாடக ஆலோசணைக் குழு ஆகியன இணைந்து 50 வது தடவையாக அரச நாடக விழா – 2022 இனை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையின் நாடகக் கலைக்கு ஆற்றிய சிறப்பான சேவைக்காக ஏ.எம்.எம்.ரவூப் மற்றும் பேராசிரியர் சுனந்த மஹேந்திர ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விருது வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் நாடகக் கலைக்கு வழங்கும் சேவைக்காக ஹிரான் அபேசேகர, எம்.சபீர், சுஜீவ பதினிசேகர, பீ.ஈ.சுபுத்தி லக்மாலி மற்றும் உள்நாட்டு நாடக கலையின் மேம்பாட்டிற்கான சேவைக்காக நாலன் மெண்டிஸ் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அதனையடுத்து சுவர்ண ஜயந்தி நாடக விழாவை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு புத்தசாசன, சமய விவகார, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதற்கு இணையாக நாடக வரலாறு உள்ளிட்ட நாடக அரங்கியற் கலையுடன் தொடர்புடைய கண்காட்சியையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.

அரச இலக்கிய ஆலோசகர் சபையின் தலைவர் வண. ரம்புக்கன சித்தார்த்த தேரர், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் யசிந்தா குணவர்தன, அரச நாடக ஆலோசகர் சபையின் தலைவர் பராக்கிரம நிரியெல்ல உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.