“அஸ்வெசும” பெறத் தகுதியுடைய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும்

  • ” அஸ்வெசும” மற்றும் ” உறுமய” திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரச அதிகாரிகளின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி.

அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வில்கமுவ கிராம அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி முன்னிலையில் அறிவிப்பு.

  • “அஸ்வெசும” பயனாளிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி ஆராய்ந்தார்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் (29) முற்பகல் நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக வில்கமுவ கிராம அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி முன்னிலையில் அறிவித்தமையும் விசேட அம்சமாகும்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பமாகியதோடு இன்று (29) வரை 35,920 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 14,537 விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் ஊடாகவும், 21,383 விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைத்துள்ளன.

இன்று வரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான அதிகளவான விண்ணப்பங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளன. அந்த எண்ணிக்கை 4,892 என்பதோடு கண்டி மாவட்டத்தில் இருந்து 4,708 விண்ணப்பங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 2,971 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து 2,243 விண்ணப்பங்களும், கொழும்பு மாவட்டத்தில் 2,099 விண்ணப்பங்களும், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 2,017 விண்ணப்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 1,887 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் இருந்து இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,633 ஆகும். புத்தளம் மாவட்டத்தில் இருந்து 1,632 விண்ணப்பங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 1,408 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1,405 விண்ணப்பங்களும், பதுளை மாவட்டத்தில் இருந்து 1,289 விண்ணப்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 1,166 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. காலி மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 981 என்பதோடு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 954 விண்ணப்பங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 782 விண்ணப்பங்களும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 687 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் இருந்து 570 புதிய விண்ணப்பங்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 525 புதிய விண்ணப்பங்களும், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 472 விண்ணப்பங்களும் வந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 451 விண்ணப்பங்களும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 421 விண்ணப்பங்களும், வவுனியா மாவட்டத்தில் இருந்து 389 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 183 புதிய விண்ணப்பங்களும், மன்னார் மாவட்டத்தில் இருந்து 155 புதிய விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

முதல் கட்டத்தின் கீழ், சுமார் 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரணங்களைப் பெற்று வருகின்றனர். இரண்டாவது கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி ஒருவர் வில்கமுவ பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த முதல் தடவை என்பதைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு ஆகியவற்றுக்குச் சென்று பணிகளை பார்வையிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதேச செயலகப் பதிவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிந்தார்.

பின்னர் மாத்தளை பிரதேச செயலக பிரதான கேட்போர் கூடத்தில், மாத்தளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து சாதகமான பதில்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அஸ்வெசும பயனாளிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்கள் முன்வைத்த பல பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் உடனடித் தீர்வுகளை வழங்கியமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வில்கமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியதுடன், அவர்களது தொழில்சார் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார். அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டங்களுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,

” கடந்த ஆண்டு முதல் அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இத்திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை அறிய இன்று வில்கமுவவிற்கு வந்தேன். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு வங்குரோத்தடைந்த தருணத்தில் தான் நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றேன். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை. இத்தகைய வங்குரோத்து சூழலில், மக்கள் தங்கள் தொழில்களை இழந்து, பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர். எனவே, நாட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதன்படி நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அதன்பிறகு, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்தோம். அதன்படி அஸ்வெசும மூலம் சமுர்தித் திட்டத்தை விட மூன்று மடங்கு உதவிகளை மக்களுக்கு வழங்க முடிந்தது.

இதன்படி, அஸ்வெசும நிவாரணம் தேவைப்படும் அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதே எமது நோக்கமாகும். கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து செயற்படுவதன் மூலம் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளது.

நம் நாட்டில் சுமார் 16 இலட்சம் சமுர்திப் பயனாளிகள் இருந்தனர். ஆனால் நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கிறோம். மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும். 2015ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி வகித்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன். அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம்.

மேலும் நாங்கள் ‘உறுமய’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். 1935 ஆம் ஆண்டு முதல் காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் காணி உரித்து பெற்ற அனைவருக்கும் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் முழுமையான காணி உரிமையைப் பெறுவர். சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வந்த பிரச்சினை தீரும். உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்படும். இந்த அனைத்து வேலைத் திட்டங்களின் கீழும் மக்களுக்குப் பாதுகாப்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பிரதேச செயலகங்களுக்கு அதிகளவான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இப்போது நாட்டின் பொருளாதாரம் சாதகமான வளர்ச்சியைக் காட்டுகிறது. எனவே, இந்த மாகாணத்தில் வருமான வழிகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பிரதேசமாக இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும். நவீன விவசாயம் மற்றும் ஏற்றுமதிக்கான பலசரக்குப் பொருள் கைத்தொழிலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொக்கோ மற்றும் கோப்பித் தோட்ட அபிவிருத்திக்கு புதிய முதலீட்டாளர்களுடன் புதிய தோட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வில்கமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தி கே.ஏ.ஜி.தென்னகோன்:

”நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது சாதகமாக கருத்து வெளியிட்ட ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்று செயற்பட்ட மகத்தான தலைவராக நாம் உங்களைப் பார்க்கின்றோம். இருண்ட காலத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி, மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளீர்கள். அத்துடன், வில்கமுவ தேசிய பூங்காவை சுற்றுலா வலய பட்டியலில் இணைத்து, இந்த மாகாணத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான வேலைத் திட்டத்தை தயாரிக்குமாறும் கோருகிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித். யு. கமகே, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டாகொட, நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன உள்ளிட்ட பிரதான அரச அதிகாரிகள் மற்றும் அஸ்வெசம பயனாளிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.